பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெலாரசின் விக்டோரியா அசரன்கா முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில், சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், பெலாரசின் விக்டோரியா அசரன்கா, செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச் மோதினர். முதல் செட்டை ஜான்கோவிச் 6–1 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட அசரன்கா, 2வது செட்டை 6–3 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய அசரன்கா 6–4 என வென்றார். முடிவில் விக்டோரியா அசரன்கா 1–6, 6–3, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
செரினா அசத்தல்:
மற்றொரு அரையிறுதியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவா மோதினர். முதல் செட்டை 6–2 எனக் கைப்பற்றிய செரினா, ‘டை–பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 7–6 என தன்வசப்படுத்தினார். இறுதியில் செரினா 6–2, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு தகுதி பெற்றார்.
இன்று நடக்கவுள்ள பைனலில், செரினா வில்லியம்ஸ், அசரன்காவை எதிர்கொள்கிறார்.
பெடரர் முன்னேற்றம்:
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6–1, 6–1 என்ற நேர் செட் கணக்கில், ஆஸ்திரேலியாவின் மரின்கோ மடோசவிக்கை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில், ஜப்பானின் கெய் நிஷிகோரி 6–4, 5–7, 6–2 என்ற செட் கணக்கில், குரோஷியாவின் மரின் சிலிக்கை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்ற காலிறுதி்ப் போட்டிகளில், ஆஸ்திரேலியாவின் ஹெவிட், பிரான்சின் ஜெரிமி சார்டி வெற்றி பெற்றனர்.